வெள்ளி, 30 ஏப்ரல், 2010

#19 ஹைரோப்பா [1 ]- பூர்வாங்கம் விசா வீசை என்ன விலை?



ஐரோப்பா போக முடிவு பண்ணியாச்சு. இது ஒரு ட்ரைனிங் கம் டூர். இந்த தொடரில் ட்ரைனிங் சம்பந்தமான போர்ஷன்ச விட்டுவிட்டு ஜாலி போர்ஷன்ச மட்டும் சொல்வதாக பிளான். எங்க institute ட்ரிப் அரேஞ் பண்ணி இருந்தாங்க. லாஜிஸ்டிக்ஸ் க்கு ஒரு டூர் ஆபரேடர் மூலம் செய்து இருந்தாங்க.
ஐரோப்பா என்றவுடனே பயங்கர குளிர், பியூர் வெஜ் சாப்பாடு கிடையாது, தண்ணி கூட காசு கொடுத்து வாங்கணும் போன்ற உதரல்களுடந்தான் இந்த ப்ரோக்ராம்க்கு ஒத்துக்கொண்டேன்.

முதலில் விசா வாங்கணும் என்றார்கள். நாமோ விசா வீசை என்னவிலை என்று கேட்கிற கேசு. நமக்குத்தெரிஞ்சு ஐயம்பேட்டை லெவலுடன் நம் சொந்தபந்தங்கள் எல்லாம் முடிந்து போகும். ஐரோப்பாவாவது பொய்ரோப்பாவது . ஆனா , விசாவபத்தி மட்டும் ஒரு வார்னிங் மனசில் ஓடியது. US எம்பசி வாசலில் பெரிய்ய்யய்ய க்யூவில் கால் கடுக்க நிற்கும் மேட்டுக்குடி மக்களை பல முறை பார்த்து பரிதாபப்பட்டு இருப்பதால் , இந்த விசா சமாச்சாரத்தில் மட்டும் எனக்கு ஒரு உதறல் இருந்தது. விசா கொடுக்கும் முன் வெள்ளைக்காரன் எல்லாம் கேள்வி கேட்டு, interview பண்ணி தொல்லை செய்வார்கள் என்று ஒரு பட்சி சொல்லியிருந்ததால் நம் டென்ஷன் எகிறியது.
US கான்சலேட் ஆபீசில் அமெரிக்க விசாதான் கொடுப்பார்கள். UK மற்றும் ஐரோப்பா விசாவிற்கு வேறு ஆபீஸ் என்று என் மண்டையில் ஏற பல நாள் பிடித்தது. அபியும் நானும் பிரகாஷ் ராஜ் போல் பயங்கரமாக பிரிபரேஷன் எல்லாம் செய்துகொண்டு போனால், யூ கே விசா ஆபீஸ் பச்சையப்பாஸ் காலேஜ் எதிரில் என்றார்கள். ஆனால் இந்த ஸ்தலத்தில் பெரும் கூட்டத்தை இதுவரையில் பார்த்ததில்லை என்பதால் சின்ன ஆறுதல். என்றாலும்  டென்சனுடன் காலை பத்து மணிக்குப் போனேன். முதல் கேள்வி: செல்போன் வைத்து இருக்கிறீர்களா . கேட்டவர் செக்யுரிட்டி. யப்பா ஈசி கேள்வி. உள்ளே போனால் பேங்க் போல் நிறைய கௌண்டர்கள். நான் எதிர் பார்த்தது போல் ஒரு வெள்ளைக்காரன்கூட இல்லை. நம்மூர் முன்சாமி, கந்தசாமி சுப்புலட்சுமி தான். அப்ப்ளிகேஷனை ஒருதரம் பார்த்துவிட்டு ஓகே ஒரு வாரத்தில் கிடைக்கும் என்றாள் அந்தப்பெண். அய்யோ படித்தது எல்லாம் வீணா? ஒரு கேள்வி கூட கேட்கவில்லையே. மனசு ஆற ரொம்ப நேரம் பிடித்தது. யூரோ விசா பாம்பேயில் டூர் காரர்களே ஏற்பாடு செய்து கொள்வார்களாம் ஒரே வாரத்தில் ரெண்டு விசாவும் ரெடி. யூரோ விசாவிற்கு பெல்ஜியம் கான்சலேட் ஆபீசில் அரேஞ் பண்ணி இருந்தார்கள். ஒரு நல்ல விஷயம். இன்டர்நெட்டில் சென்னையில் இருந்தபடியே யுரோ விசாவை track செய்ய முடிந்தது.
அடுத்தது கரன்சி. சாப்பாடு , ஹோட்டல் எல்லா செலவையும் டூர் ஆபரேடர் பார்த்து கொள்வதால் "வெத்தலை பாக்கு பீடி சிகரெட்" செலவுக்கு மட்டும் பாரின் கரன்சி எடுத்துக்கொண்டால் போதுமானது. கொஞ்சம் பவுண்ட் (லண்டனுக்காக) கொஞ்சம் யூரோ, கொஞ்சம் சுவிஸ் பிரான்க் வாங்கி வைத்துக்கொண்டு, ஏப்ரல் 5 க்காக காத்து இருந்தேன்.....


வியாழன், 29 ஏப்ரல், 2010

#18 பிராமணனா பார்ப்பானா

தமிழ் கூறும் நல்லுலக பதிவாளர்களில் பலர் , முக்கியமாக பெரியார் கட்சிக்காரர்களும் அவர்தம் வழித்தோன்றல்களும் பிராமணர்களை பார்ப்பான் என்றே எழுதுகின்றனர். பிராமணர்கள் என்றால் ஏதோ அவர்களை உயர்த்திப்பிடிப்பது போலவும் பார்பானர்கள் என்று எழுதினால் அவர்களுக்குரிய இடத்தில் அவர்களை வைப்பது போலவும் நினைக்கிறார்கள். நிற்க

பிராமணர்கள் என்றால் பிரம்மத்தின் வழி நடப்பவர்கள் என்று ஒரு பொருள் உண்டு. பிரம்மத்தின் வழி என்றால் அறவழி என்று கொண்டால் " அந்தணர் என்போர் அறவோர்" என்ற வள்ளுவரின் வார்த்தை ஏறக்குறைய மேற்சொன்ன difinition க்கு ஒத்து வருகிறது. காலப்போக்கில் "வழி நடப்பு" என்பது மாறி " பிறப்பு" என்பது criterian ஆனது.
பிராமணர்கள் என்றால் ஏனோ ஒரு சிலருக்கு பிடிக்காத வார்த்தையாய் போனது. மேற்சொன்ன படி, பிராமணர்கள் என்ற பதம் எவ்விதத்திலும் யாரையும் உயர்ச்சியாக சொல்லும் வார்த்தையாக கொள்ள முடியாது. சரி இப்போது பார்பனர்கள் என்ற வார்த்தையை பார்க்கலாம்.

பிராமணர்களை "இருமுறை பிறந்தவர்கள்(த்விஜர்கள்) " என்று சொல்லுவார்கள். இவர்கள் இயற்கையாக ஒரு முறையும் பூணல் போடும் போது ஒரு முறையும் பிறந்ததாக கருதுவது வழக்கம். அதாவது பிராமண வாழ்வில் முக்கியமானதாக கருதப்படும் பூணல் அணிவதையும் ஒரு பிறப்பாக கருத்தில் கொண்டு பிராமணர்களை மேற்க்கண்டவாறு கூறுவார்கள்.
பறவைகள் மட்டிலுமே இரு முறை பிறக்கின்றன. முட்டையாக ஒரு முறையும் பிறகு முட்டையில் இருந்து ஒரு முறையும் பிறக்கின்றன. பிராமணர்களும் இருமுறை பிறப்பதினால் அவர்களை பறவைக்கு ஒப்பிட்டு, "பார்ப்பு + அனர்கள்" அதாவது பார்பனர்கள் என்று கூறுவார்கள்.
பார்பனர்கள் என்ற வார்த்தை பிராமணர்கள் வாழ்வில் மிக முக்கியமானதாக கருதப்படும் "யக்யோபவீத தாரணத்தை" ஒரு புதிய பிறப்பாக கொண்டு சொல்லப்படும் ஒரு சொல்லாகும்.

பிராமணன் என்ற வார்த்தை ஒருவரின் நடத்தையை முன்னிட்டு சொல்லப்பட்டால் , பார்ப்பனன் என்பது பூணல் அணிவிப்பு நிகழ்ச்சியை, ஒரு முக்கியமானதாக கொண்டு கூறப்படும் வார்த்தை.
எனவே பார்பனர்கள் என்பது பிராமணர்கள் என்பதைவிட அதிக "ஆச்சாரமான"  வார்த்தை.
கருப்புசட்டை பதிவர்களே அர்த்தம் புரிந்து எழுதினால் நலம்
அன்புடன்
விஸ்வாமித்திரன்.